Tuesday 2 September 2014

பாரபட்சம்

நேற்று செவ்வாய்கிழமை
வாரச்சந்தை தினம்
சாலையோரம் முழுதும்
நடைபாதை வியாபாரிகள்
கடைவிரிக்க மக்கள் 
வெள்ளமும் ஈசல் போல
அடுக்கி வைக்கப்பட்ட
காய்களின் அழகும்
வியாபாரிகள் விற்பனைக்
கூவலும் வண்டிகளின்
சப்தமும் ஆர்பாரித்து
அல்லோகலப் பட
நாட்கள் நாலு முழுதும்
போக்குக் காட்டிய
மழை பெய்கிறேன் என்ற
தொனியில் பெய்யத் தொடங்க
விதைத்தவனுக்கு சந்தோசம்
கொடுக்கும் இம்மழை
அறுவடை செய்தப்
பொருளை விற்பவனுக்கு
என்ன சுகம் தரமுடியும்
என்ற இயற்கையின்
பாரபட்சத்தை எண்ணி
சங்கடத்தில்
மழையில் நனைந்துக்
கடக்கிறேன் எனக்குரிய
காய்கள் எனது வண்டியில்
பெட்டிக்குள் பத்திரமாக

இரயில் நிலையத்தில்...

இரயில் நிலையத்தில் 
காத்து கொண்டிருக்க
காலதாமத அறிவிப்பு,
எதிர்பாராத வேளை
என்னருகில் வந்தமர்ந்தவரிடம்
வயோதிகம் ஆளுமை கொண்டிருந்தது 
வீடு கைவிட்டிருந்தது
பழுப்பேறிய வெள்ளை உடையிலும்
பார்வையின் குறை பாழடைந்த
கண்ணாடி கூட்டிலும் தெரிய
கையில் பைப்பொதி
எங்கே செல்ல என்று
அறிந்திருக்கவில்லை
அந்த சமயம் புகைவண்டி
ஒன்று வந்து நிற்கிறது
தள்ளாடி எழுந்த அந்த
முதியவரின் நடை
நத்தை பிரயாணத்தை
ஒத்திருக்க
அதைப் பார்த்த இதயங்கள்
ஒருமுறையாவது படபடத்திருக்க
வேண்டும் இருந்தும்
உதவிக்கு யாருமில்லை
முதியவரும்
நடையை விடாத நிலையில்
ஒரு பெட்டியை கடந்த போது
வண்டி அவருக்காக காத்திருக்க
மனமில்லாமல் வேகத்தைக் கூட்ட
ஒரு நிமிடம் யோசித்த
அந்த முதியவர் மீண்டும்
அதே நடையில் வந்து
என்னருகில் அமர
பேச்சுக் கொடுக்க தயக்கம்
காட்டிய மனதை குற்றம்
கொண்ட வேளையில்
நண்பனின் அழைப்பால்
அவரை விட்டு அகன்றேன்
வந்து சேர்ந்த போது
அந்த இடத்தில் அந்த
முதியவரைக் காணவில்லை
புறப்படத் தயரான புகைவண்டியின்
அறிவிப்பு என் கவனத்தை திருப்ப
படபடப்போடு என் நினைவும்
இயலாமையும்....

விளக்கும் அணைந்து போனது..

கருத்தில்லாமல்
சிந்திக்காமல்
சிதறும் வார்த்தைகளை
அடுக்கி வைத்தான்
அந்த புதுக் கவிஞன்
சில இடங்களில் 
அடித்தலும் கிறுக்கல்களும் 
எழுதிய தாளில்
கவிதையின்
வளர்ச்சியும் கவர்ச்சியும்
குறைந்தது போல தோற்றம்
இடையிடையே விடுபட்ட சொற்கள்
இணைத்து வைத்திருக்கிறான்
எழுதியதை மாற்ற முடியாது போலும்
அடித்தலும் கிறுக்கலும் கவிதையின்
உள்ளமைப்போ
விளங்கவில்லை அதன் அமைப்பு
கவிஞனின் சிந்தனை சிதறுகிறது
உரிமையான அழைப்பு அது
வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன்
பசியின் கோரம் அவன் வயிற்றில் காண
பிடிச் சோறில்
பிடித்தவனாகி விட்டான் அந்த கவிஞன்
வீட்டினுள்ளே
தண்ணீர் பருகும் சப்தம் கேட்கிறது
வந்த கவிஞன் பேனாவை
மூடி வைத்து என்னையும்
கசக்கி தூற எறிந்து விட
விளக்கும் அணைந்து போனது..

குட்டி கவிதைகள்

வயிற்றில் 
இடமில்லை
இருந்தும்
பசித்திருக்கிறான்
மிருகமாய்.....



காதல்
துன்பம் 
ஏமாற்றம் 
எதிர்பார்ப்பு 
இழப்பு 
இவையே
நவீன கவிதை



எனை மறந்தேன்
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று.....



எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
நேரில் அவளைப் பார்த்ததில்லை
இருந்தும் நான் காதலிக்கிறேன்
காரணம் அவளும் என்னை
காதலிப்பதால்....



பல்லாயிர ஜீவன்களையும்
விழுங்கிய பூமி
எப்போதும் போல் அழகாகவே...



மதுவும் ஆசையும் 
உலகியல் வாழ்வில் 
ஒரே மாதிரியான போதையே ..




நண்பகலில் 
நான் மட்டும் 
என் நிழல்
காலடியில் 
சிரமப்பட்டு 
கொண்டிருக்கிறது ..



வாழ்வு முன்னோக்கி
மட்டுமே என் மாற்றத்திற்கு
நான் பொறுப்பல்ல ..



பிணத்தை 
உறிஞ்சி 
வளர்ந்த மரம் 
காற்றோ
இளந்தென்றலாய் ...



நீண்ட இரவு 
நீடித்த மழை
வீதிகளில் வெள்ளம்
குளிரில் சிறுவன் 
வழி மறந்த கண்களில் 
பசியின் துக்கம்
சிந்தனையில் 
பிறப்பின் ஐயம் 
சாலைகளில் வண்டிகள் 
உண்டாக்கும் அலையில் 
அவன் உடை
நனைந்து கொண்டிருக்கிறது ..



நின்ற நிலையில் 
மாடும் ஆண் கன்றுகளும் 
கடைசி பிரயாணத்தில் ..



சிரிக்க
மறந்த
கலைஞனின் 
கைவண்ணத்தில் 
சிலைகள் 
அழகாக 
சிரிக்கிறது ..



இளமையில்
உதித்த காமம்
நீர்த்துப்போகும் 
உதிரமாய் ..



கவிதையும் 
விதையே 
மனதில் 
விதைத்தால் 
வளரும் 
மரமாய் ...



நான் 
நேசித்த
முகம்
யோசித்த 
முகமாய் ..



கையில் 
பிச்சைப் பாத்திரத்துடன்
திருமண அரங்கினுள்
நானும் ஒரு
மனிதனாய்...



நிலவு தேய்வதுமில்லை
மறைவதுமில்லை
சூனியக்காரர்களாக
சூரியனும் பூமியும்...



புரிந்து விட்டேன்
வெறுத்து விட்டேன்
மறந்து விட்டேன்
எல்லாம் இன்று 
ஒரு நாள் மட்டும்
நான் குடிக்கவில்லை
இருந்தும் உளறுவது போல்...



மறந்து போன விசயங்கள்
மறுத்து போனவை அல்ல
வெறுத்து போனவை..



உதடுகள் சிரிக்க
உண்மை..



உயிர் பிரிந்தவனின் 
அடையாளம்
பிணமாய் மட்டும்..



மதுவின் மயக்கத்தில்
தடுமாறும் கிழவனுக்கு
மூன்றாவது கால் மட்டும்
என்ன செய்ய முடியும்..



புரிந்து கொள்ளமுடியாது
வரிகளில் புதைந்து போவது
கலைஞனின் உணர்வுகளே..




செண்டை மேளம் விண்ணை முட்ட
திருமண வரவேற்பில் பொடிபறக்க
மீந்தும் உணவுக்காக வெளியே 
மனித அடையாளம் மட்டும்
வைத்திருக்கும் மனிதர்கள் ...



தொடரும் ......








Monday 25 August 2014

புதுக்கதை

நிலவைக் காணாத பராதியில்லை
நட்சத்திரங்களுமில்லை
எனபதால் இரவில்லை 
எனறாகி விடுமோ 
இருள் சூழ 
நிசப்தம் சில் வண்டுகளின்
ரீங்காரத்தை காதில் சேர்க்க
வீட்டின் வௌி முற்றத்தில்
கொதுவின் கடியில்
லா ச ரா வின் பிடியில் நான்
பக்கங்கள் புரள எழுத்துக்கள்
விழிகளின் வழியே மனதைத் தொட
வார்த்தைகளின் ஜாலம் நிகழ்வுகளை கோர்க்க
நிகழ்வுகள் சம்பவங்களின்
தொகுப்பாய் விரிய 

இத் தொகுப்புகள் குறுங்கதையாய் மனதில் குடியேற 
வார்த்தைப் பிரயோகங்கள் 
அந்நியத்தை உணர்த்த வாசிப்பில் சலிப்பைக்
கொள்ளாமல் சம்பவங்களை இணைத்து கதையாக்கி
கொண்டிருக்கிறேன் கதை முடிவுறும் நேரம் 

புத்ர எனும் புதினம்
புதுக்கதையாய் என் மனதின்
சேமிப்பில்

என்ன தெரியும்

என்னைப் பற்றி என்ன தெரியும்?
எல்லாம் தெரியும்
எல்லாம் தெரியுமென்றால்?
நீ ஓரு கோபக்காரன்
நானா எப்படி சொல்லுகிறாய்?
எப்போதும் சண்டை போடுவதால்
ஆமாம் நீ செய்வது சரி இல்லை
என்ன சரி இல்லை?
பழசை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாய்
ஏன் பழசை நினைக்கக் கூடாது?
அதில் சுவாரஸ்யம் இல்லை சோகம்
மற்றும் வலிகள் நிறைந்தது
அதனாலென்ன அந்த அனுபவம் தேவைதானே?
இருக்கலாம் இருந்தும் அவை கசப்பாய் தெரிகிறது
கசப்பு தேவை இல்லையோ?
யாருக்கு வேணும்
உனக்கு மட்டுமானது தான்
அதுவே உன் வாழ்ககைக்கு
ஆதாரம்
இறுதியாய் என்ன சொல்ல வருகிறாய்?
பழயதை மறக்காதே
சரி ஒத்துக்கொள்கிறேன் இன்று
இரவு என்ன செய்ய போகிறாய்?
உண்ண வருகிறேன்
உறங்கும் வரை உன்னுடன் இருக்கிறேன்
பிறகு?
உன் உள்ளுணர்வுடன் உன் மனம் போன போக்கில்

நீலச் சட்டை

அதிகாலை பொழுது
வெடிகளின் சப்தம்
விண்ணை முட்ட
எழ மறுக்கிறான்
சிறு பிராயத்திற்கு
தெரியவில்லை
வறுமையின் உச்சம்
பொழுது அவனுக்காக
காத்திருக்கவிலலை
இந்த சிறுவனும்
பிடிவாதத்தை 

தளர்த்தவில்லை 
வித்த தாயின்
மனதோ தைத்தது ஒட்டுத்
துணியில் புதிய உடுப்பு
பார்த்த சிறுவனுக்கோ
பரவசத்தின் எல்லை
வேகமாக குளித்து
தைத்த ஆடையை
அணிந்து வீதியில்
விளையாட பறக்கிறான்
வீதியில் பார்த்தவன்
சுமை தூக்கப் போகிறாயா
என்று பரிகசிக்க
அந்த சிறுவனுக்குத்
தெரியாது நீலச்சட்டை
மூட்டை தூக்குபவனின்
அடையாளமென்று...

வெளிச்சம் குறைகிறது

வௌிச்சம் குறைகிறது
நிழல் கரைகிறது
தனித்து விடப்பட்ட
பாதையின் தூரம்
தௌிவில்லை
நாய்களின் ஊளை
நரிகளை காட்ட
குறுக்கே பூனை
பாய்கிறது நட்சத்திரங்கள்
துணை சொல்ல
நிலவின் வௌிச்சம்
சூன்யத்தில் தூரத்தில்
ஓர் உருவம் மரத்தை
அசைந்து கொண்டிருக்க
கால்கள் முன்னோக்கி
நடக்க மறுக்க முதுகை
ஒருவன் உந்தி தள்ள
எதிர்க்க முடியாமல்
ஒவ்வொரு அடியாய்
தலை அனிச்சையாய்
சுடுகாட்டில் எரியும்
பிணம் அதிலொருவன்
மேலெழ பாதி வெந்த
நிலையில் அசைக்கும்
தள்ளும் உருவங்களுடன்
கூட்டணி உதயமாக
இதயத்தின் துடிப்பு என்
காதுகளில் திடீரென்று
வெடித்த சப்தம்
எழுந்து பார்க்கிறேன்
வானம் நிசப்தமாய்
மரம் காற்றில் அசைய
கோவிலின் பண்டிகை
நடு இரவில் களை
கட்டுகிறது .......

வேண்டுதல்கள்

கடவுளே

என் நாளை இனிய நாளாக அமைத்துக் கொடு

என் வேலையை சுலபமாக்கி கொடு

என் குடும்பத்தை செல்வ செழிப்போடு காப்பாற்று

என் வியாபாரத்தை பெருக்கு

நல்ல ஏமாளியை காட்டு

எனக்கு நல்ல படிப்பு சக்தியை கொடு

இன்றைய தேர்வில் வெற்றி பெற ஞாபக சக்தியை கொடு

ஒன்றுமே படிக்கவில்லை இருந்தும் தேர்ச்சி செய்ய வை

இன்று திருட நல்ல வீட்டைக் காட்டு

கொலை செய்து விட்டேன் போலீசிலிருந்து காப்பாற்று

என்னை அழகாக வை

என் முதலாளி என்னை திட்டாமல் இருக்க வை

அழகான பெண்ணைக் காட்டு காதலிக்க

மழையை கொடு

என் குழந்தையைக் காப்பாற்று

இன்று குடிப்பதற்கு வாங்கி கொடுக்க நல்ல நண்பனை காட்டு

கடன் கேட்காமல் இருக்க வை

என் பேப்பரை திருத்தும் வாத்திக்கு பாஸாக வைக்கும் மனதை கொடு

நல்ல வீடு வாங்க வேண்டும்

இது போன்ற வீடுகள் நிறைய வாங்க வேண்டும்

வாடகை கொடுப்பவர்களை ஒழங்காக கொடுக்க வை

வட்டிக்கு பணம் கொடுக்க நல்ல ஆளை காட்டு

கொடுத்த பணத்தை வசுலாக்கி கொடு

மனநிம்மதியை கொடு

சந்தோசத்தை மட்டும் கொடு

நோயிலிருந்து காப்பாற்று

ஒரு வேளை உணவுக்கு வழி செய் ஆண்டவா

நல்ல வேலைக்கு வழி கொடு

அழகான ஆண்குழந்தையை கொடு

பெண் குழந்தை வேண்டாம்

இந்த பெண்ணை கரை சேர்க்க வழி காட்டு

என் மகனுக்கு நல்ல புத்தியை கொடு

நல்ல நண்பர்களை காட்டு

எடுத்த காரியத்தில் வெற்றி கொடு

நினைத்தக் காரியம் நிறைவேற்று

விபத்திலிருந்து காப்பாற்று

இன்னும்

இன்னும்

இன்னும்

முறையீடுகள் எதற்காக ?

எல்லாம் நிறைவேறி விடுகிறதா ?

குறிப்பு வேண்டுதல்களில் இட ஒதுக்கீடு கிடையாது.....

கதை சொல்லப் போகிறேன்

மாயவலை...

எனை மறந்தேன்
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று...





மறந்துப்போன...

மறந்து போன விசயங்கள் என்று 
ஒன்றில்லை அது நம் மூளையின்
மூலையில் உறங்கிக் கிடக்கிறது
குப்பையாய்- நிலை மாறும் 
தருணங்களில் நீண்டு எழும்
நினைவுகளின் அலையில்
தூசு தட்டப்பட்டு நம்மை
ஊசிப்போலக் குத்தும் நாம் 
மறந்துப் போன விசயங்கள்..



கவிதை இல்லை...

இதயம் பலஹீனமானவர்கள்
இந்த கவிதையை படிக்க
வேண்டாம் காரணம் இந்த
கவிதையில் இரக்கமில்லை

சமூகப் போராளிகள் இந்த
கவிதையை படிக்க வேண்டாம்
காரணம் இந்த கவிதையில்
போரட்டமில்லை

கவிதை படைப்பவர்கள் இந்த
கவிதையை படிக்க வேண்டாம்
காரணம் இதில் கவிதையே இல்லை




இறந்துவிட்டது...

மிகவும் மெதுவாக
உணவை உண்டு
கொண்டிருக்கிறேன்
காரணம் ருசியை
என் நாக்கு உணர்ந்து
கொண்டிருக்கிறது
இருந்தும் எனது
உணவு முடிந்து விட்டது
அதனுடன் எனது
ருசியும் இறந்துவிட்டது




புரிந்து கொண்டேன்...

புரிந்து கொண்டேன்
இருந்தும்
புரியாமல் தவிக்கிறேன்

புரிந்து கொண்டேன்
புரியாததையும்
தவிப்பதையும்

புரிந்து கொண்டேன்
புரியாமல் தவிப்பதை
தவிர்ப்பதற்காக

புரிந்து கொண்டேன்
இதை
படிக்கும் போது
நீங்கள் தவிப்பதை

புரிந்து கொண்டேன்
நீங்கள் தவிக்காமல்
தவிர்க்க

தவிர்க்க நீங்கள்
புரிந்து கொண்டால்
புரிந்து கொண்டதை
புரிய வைக்கவும்...




இளமைக்கால தழும்புகள்...

பருவத்திற்கு பூக்கும் மரம் போல 
மனதில் கசப்பு பூக்களாய் பூக்கும்
எனது இளமைக்கால நினைவுகள்
அமைகின்ற வாழ்வில்
அடியோடு மாற்றினாலும்
தழும்பாகி போன ரணங்கள்
நிசப்தமில்லா இரவினில் 
உறங்கும் உள்ளத்திலிருந்து
வௌிப்பட்டு கழுத்தை
நெறிக்கும் பிசாசாய்
எதற்காயும் விசனம் காட்டா
இயற்கையை போல் இருந்து விட
எத்தனித்தாலும் தனித்தே
விடப்பட்டசமயத்தில்
மழைக்கு சிணுங்கும்
தேரையை விழுங்கத் துடிக்கும்
பாம்பை போல் மெல்ல
மெல்ல ஊர்ந்து சமயம்
நோக்கி செலுத்தப்படும்
விசம் போல என்
இளமைக்கால தழும்புகள்....




கதை சொல்லப் போகிறேன்...]

கதை சொல்லப்
போகிறேன்
இந்தக் கதையில் 
கதையில்லை
கவர்ச்சயில்லை
கதாபாத்திரங்களில்லை 
நகைச்சுவை 
ஆடல் பாடல் இல்லை
சமூக சீரழிவு பற்றி இல்லை
சண்டை இல்லை
இல்லாத இத்தனையும்
ஒரு கதையாக சொல்லி
கதை முடிக்க
ஒரு கதையாசிரியரை
தேடிக் கொண்டிருக்கிறது
இந்த கதை....




மீந்த உணவு...

குப்பையில் மீந்த உணவு
நக்கித் தின்னும் நாய்
நாயை விரட்டி பசி
போக்கும் சிறுவன்
தேநீர் கடை வாசலில்
தேர்தல் அறிக்கை
நாடு வல்லரசாக்கப்படும்...



கனவின் கொடூரங்கள்...

பல கொலைகளுக்கு 
சாட்சியாகவும் 
பயங்கரமான காட்டு
மிருகங்களுடனான
சண்டைகளும்
பாம்பின் துரத்தல்களும்
துடுப்பில்லா
படகில் நடுக்கடலில்
தத்தளிக்கும் தவிப்பிலும்
முற்றுப்பெறப் போவதில்லை
கனவின் கொடூரங்கள்...




நினைவுப்பாதை...

உனக்கும் எனக்கும்
ஆன உறவு இன்றோடு
முடிவதில்லை
முயற்சிக்காதே
நீயாக முடித்துக்
கொள்ள நடந்தவைகள்
நினைவின் களமாக
நிஜத்தின் நெடும்
பாதையில்
நெருடலற்ற
பயணத்தில்
நீயென்று
நீயும்
நானென்று
நானும்
நாம் என்ற
கனவோடு
நினைவுகளில் இல்லா
நினைவுப் பாதையில்....




விண்ணோடு உரையாடல்...

இரவாகிவிட்டது 
இருந்தும்
நிலவை காணவில்லை
மனதில் குடிபுகுந்த
தனிமையோடு
லயமில்லாச் சிந்தனை
கொள்ள அந்நேரக்
காற்றோ அசுரத்
தனமாய் பெய்யத்
துடிக்கும் மழையை
தடுக்க ஏன் என்ற
கேள்வியோடு
விண்மீன் தெரியா
விண்ணோடு
என் உரையாடலை
தொடர்கிறேன்...




கவிதைகள் தொடரும்,