Tuesday 2 October 2018

காந்திக்கு பிறந்தநாள் பரிசு

மொழி வெறியாலும், இன வெறியாலும் , மத வெறியாலும், சுயநோக்கு அரசியல் தன்மைகளாலும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசம் இன்று சீழ்படிந்து போயிருக்கிறது. இந்த தேசத்திற்கு அந்த மகாத்மா அளித்த கொடைகள் அஹிம்சை, உண்மை, எளிமை ஆகியன காற்றிலே கலந்து தூசு மண்டி எங்கோவொரு இடத்தில் புதைந்திருக்கலாம். இந்திய சுதந்திரமும், காந்தியும் வீழ்ந்து எழுபது ஆண்டுகள் கழிந்து விட்டது. காந்தியின் ஆதரவு பெற்ற அரசாங்கம் தான் பொறுப்பேற்றும் காந்தியின் ஆசை கொண்ட அரசு தான் நடந்ததா என்பதில் கேள்வி மட்டுமே பாக்கி நிற்கிறது. 

அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று  வரை காந்திக்கான இடம் என்ன வெறும் வாழ்த்துக்களும் அவரின் நினைவு கூறலோடு முடிந்து போகிறது. தேசத்தந்தை, மகாத்மா, அஹிம்சாவாதி என்றெ ல்லாம் போற்றப்பட்ட அந்த ஆதர்சன நாயகனின் சரித்திரமும் வாழ்வியல் கோட்பாடுகளையும் இன்று கேட்பார் யாருமில்லை படிப்பார் யாருமில்லை மக்களிடம் கொண்டு சேர்ப்பார் யாருமில்லை (அடைப்புக் குறிகளுக்குள் ஒரு சிலரைத் தவிர்த்துக் கொள்வோம் ).

இதற்கான காரணம் என்ன நிச்சயம் இங்கு வாழ்ந்த ஆட்சியா ளர்களின் தொலைநோக்கு சித்திரம் மேலை நாடுகளின் நாகரீகத்தையும், அண்டை நாடுகளின் அரசியல் வாழ்வினையும் நகல் படுத்தி பிரகடனபடுத்தியதில் நாம் இழந்து போனது,  நம்முடைய பன்முகத் தன்மையில் அங்கமாகியிருக்கும் இந்தியன் என்ற அடையாளத்தைத் தான். அது காலத்தின் தேவை என்று சிலர் அதன் பின் நிற்கலாம் ஆனால் வரலாறு நமக்கு நிச்சயமான மற்றொரு கோர முகத்தை நம்மிடம் இன்று காட்டிக் கொண்டு நிற்கிறது. காலத்தின் தேவை என்று சொல்லும் ஆளுமைகள் மக்களுக்கான இசங்களுடன் அரியாணை ஏறிய பின் தம் மக்களைக் கொன்று குவித்த இரத்தத்தால் அந்த வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் வேலையைத்தான் பார்க்க முடிகிறது.

1939 ல் காந்தியின் பிறந்தநாளிற்காக உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகள் மற்றும் அவர் மீதான விமர்சனங்களை புத்தகமாகத் தொகுத்து  (மகாத்மா காந்தி- சர்.எஸ்.இராதாகிருஷ்ணன்/ அன்னம் பதிப்பக வெளியீடாகக் கிடைக்கிறது) காந்திக்கு பரிசாக கொடுத்தார். அது காந்தியின் கோட்பாட்டினை வெகுவாக புகழ்கிறது, இன்னொரு இயேசுவாக , கருணை நிறைந்த மனிதராக இருக்கிறார் என்றெல்லாம் பார்க்க முடிகிறது. போர் மேகம் சூழ்ந்த அந்த காலத்தில் காந்தியின்  கொள்கைக்கான தேவை மிக அவசியமானதெனச் சொல்வதைப் படிக்கும் போது காந்தியை இந்திய மக்களை விட அவர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.

அன்றையக் காலக்கட்டத்தில் மேற்கத்திய மக்களையும் கிழக்கத்திய மக்களான இந்திய மக்களையும் சேர்த்த ஒப்பீடானது  இந்தியர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும் பொறுமை நிறைந்தவர்களாகவும், போதுமென்ற மனம் படைத்தவர்களாகவும் மேற்கத்தியர்கள் நினைக்க ,(மேற்கத்தியர்களின் தூற்றல்களைத் தவிர்த்திருக்கிறேன்)  அவர்கள் அதற்கெதிரான ஆடம்பரமான ,பொறுமையற்றவர்களாக, நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பவர்களாகத்தான்  இருந்திருக்கிறார்கள். காந்தியுன் இந்தக் கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தையும் ஆன்மாவையும் சிதைத்து விடும் அதனால் அந்த கலாச்சாரத்தை  ஒரு போதும் அனுமத்திக்கவோ ஆக்கிரமிக்கவோ கூடாது என்ற அச்சமும் கொண்டிருந்தார்.

அவரது நூற்றைம்பதாவது பிறந்தநாளில் நாமும் நமது மக்களும் என்ன மாதிரியான வாழ்க்கையை தேர்ந்தேடுத்திருக்கிறோம் என்பதை காந்தி மீண்டும் வருவாரானால் நிச்சயம் அவரது மனம் தன்னிலை மறந்து அழத்தொடங்கியும் விடலாம். மேற்கத்திய கலாச்சாரப் பேய்களின் ஆதிக்கம் இங்கு ஒட்டுண்ணியாக மெல்ல மெல்லப் பரவி இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த கலாச்சாராத்தின் அடையாளத்தையும் புரட்டிப் போட்டது மட்டுமில்லாமல் மேற்கத்திய நுகர்வுபோதையின் அடிமைகளாக்கியிருக்கிறது.

ஏன் இந்த மாற்றம் என்பதை யாரும் கேள்விகள் கேட்கக் கூட நேரமில்லை. காரணம் அந்த கேள்விக்கான சிந்தனை நம்மிடம் பரவிடக் கூடாது என்பதில் எல்லா ஆளும் நிறுவனங்கள் தத்தமது முயற்சிகளால் சிந்தனையறிவை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று காந்தியை பற்றிய வாழ்த்தையோ விமர்சனத்தையோ வைப்பவன் ஒரு தீண்டத்தகாதவனாயிருக்கிறான். சந்தர்ப்பவாத அரசியல்கள் செய்பவர்களாலும், அறிவார்ந்த சமூகத்தாலும்  எந்தெந்த ஜீவன்களுக்காய் அந்த ஆன்மா போராடியதோ அந்த ஒட்டுமொத்த இனங்களே அவரை வெறுத்தொதுக்கியிருப்பதுதான் இன்று அவருக்கு நாமளிக்கப் போகிற பிறந்தநாள் பரிசு....

Friday 25 May 2018

நூல் விமர்சனம் : ஒரு புளியமரத்தின் கதை




1966 ல் வெளிவந்த இந்த புதினம் சமகாலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கமென்ன ? புனைவா ? இந்திய தத்துவார்த்த சிந்தனையா ? வலது சாரியத்தின் பக்கமா அல்லது இடது சாரியத்தின் பக்கமா? உருவகமா , இன வரைவியலா , சூழலியல் சார்ந்ததா ? என்ற கேள்விகள்தான் இன்று நூல் விமர்சனங்களில் தொக்கி நிற்கிறது.

படிக்கும் எல்லா நூல்களுக்கும் விமர்சனங்களை நம்மால் எழுத முடிவதில்லை அதற்கான காரணம் அதிகமாக பேசப்படுகிறதே என்ற ஈர்ப்புடன் வாங்கி படிக்கும் எல்லாப் புத்தகங்களும் நம்மை ஈர்ப்பதில்லை. மேலும் அது சொல்லும் விசயமென்ன என்பதும் புலப்படுவதுமில்லை. அதே நேரம் நான்கு அல்லது ஐந்து வாசிப்பாளர்களிடையே கலந்துரையாடும் போது ஒவ்வொரு புத்தகத்திற்கு நம்மைக் கடந்து பல விளக்கங்களும் கிடைக்கின்றன. அது எதைச் சார்ந்த்து என்பது படிக்கும் வாசகனின் அதிகப் பட்சமான சிந்தனையோட்டத்தில் அது கலந்து விடுகிறது. புளியமரத்தின் கதையும் அப்படித்தான். கிட்டத்தட்ட அரை  நூற்றாண்டைக் கடந்த பிறகு பல புத்தகங்களின் சிந்தனைகளும் மரபுகளும் சொல்லாடல்களும் கலாச்சார நிகழ்வின் நிழல்களும் தடம் மறந்து போய் விடுகின்றன. அதெல்லாம் தாண்டி சமகாலத்திலும் என்னால் பல விசயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்ற நிமிர்தலோடு தான் இந்த புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்திற்கு சொல்வழக்கு மிக மிக இன்றியமையாததாகும். காரணம் அது அந்த ஊரின் தன்மையை மொழியின் திரிபுகளை நமக்கழகாய் உணர்த்தும். இந்த வகையில் இந்த புத்தகத்தை அணுகும் போது அது நாகர்கோவில் கன்யாகுமரியை ஒட்டிய தென் தமிழக நிலப்பரப்பே இதன் களம். ஆகவே இதில் சிறிதாய் மலையாளம் வாடை வீசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கு இந்த மொழிநடை கொஞ்சம் கடினமானதாக தோன்றலாம். அதற்கு முன் பின்பக்கத்தில் வழக்காடு சொற்களின் விளக்கங்களைப் படித்துவிட்டு தொடங்கும் நேரம் அதன் அழகியலை உணர முடியும்.

நாவலின் காலக்கட்டம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலக்கட்டம். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு புளியமரத்தின் வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த இடத்தில் அரங்கேறிய மனித இனத்தின் நாகரீக வளர்ச்சிக்கும் , வாழ்வியல் முறைக்கும் , அரசியல் நிகழ்வுகளுக்கும், அதிகார வர்க்கத்தின் ஆளுமைகளுக்கும் , போலியான மனிதர்களின் குயுக்திகளுக்கும் இந்த மரம் ஒரு சர்வ சாட்சியாய் நின்று விடுவதால் என்னவோ சுயநலப் போக்கில் உச்சம் பெற்ற மனித இனத்தாலேயே அதற்கான அழிவும் நிச்சயிக்கப்படுகிறது என்றே சொல்வேன்.

புனைவுகள் எப்போதும் வாழ்வியல் முறையோடு ஒத்துப்போகுமா என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருக்கும். காரணம் எழுதப்படும் எல்லா விசயங்களும் ஆசிரியரின் மிகையுணர்விற்காய் இலக்கியப் போக்கிலிருந்து கடந்து எதார்த்த வாழ்வியலை விட்டு விலகும் நேரம் அது இலக்கியத் தன்மை கெட்டு சார்பியல் தத்துவ நோக்கத்தைக் காட்டிவிடுகிறது. பல நேரங்களில் புனைவுகள் மிகையுணர்வின் உச்சங்களாகி அந்த மிகையுணர்வில் தடம் மாறும் வாய்ப்பைத் தான் இன்று கொண்டிருக்கிறோம். இப்புதினம் நான் அப்படியில்லை என்று சொல்வதோடு சார்பியல் இல்லாத ஒரு நடையோடு வரலாற்றின் ஒரு சில நிகழ்வுகளோடு புனையப்பட்டுக் காலத்தின் தன்மைக்கேற்ற கதாப்பாத்திரங்களோடு நம்மை பயணிக்க வைக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்னதான திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையிலிருந்து இந்திய ஆளுமைக்கு மாறும் காலத்தில் ஒரு சாமானியன் அரசிற்கெதிராய் போர்க் கொடி உயர்த்துவதில்லை. அதனால் அவனால் எல்லாக் காலக்கட்ட்த்திலும் தன்னை தகவமைத்துக் கொண்டு தான் வாழ்க்கையை செம்மை படுத்தி ஓட்டி விட முடியும். ஆனால் ஒரு தலைவனோ அல்லது போராளியோ அப்படித் தன் வாழ்வை அடிமை நிலைக்குப் பின்னான வாழ்வில் சாதரணமாய் தகவமைத்துக் கொள்ள முடியுமா என்ற புதிய கேள்வியை எனக்குக் கொடுத்து அதற்கான பதிலையும் கொடுத்து விடுகிறது,

அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் இன்றைய சமகால அரசியலோடு நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இன்று அரசியல் என்ன செய்துக் கொண்டிருக்கிறதோ அதே தான் அன்றைய நிலைமையும் என்பதை படிக்கும் போதே எனக்குள் இந்த நாவலைப் பற்றி எழுதவேண்டுமென தோன்றியது. இன்றைய அரசியலில் எப்படி மதம் இனம் மொழி முன்வைக்கப்படுதலையும், ஊடகங்கள் எப்படி தன் நிறங்களை மாற்றி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுதலும் அரசியலில் ஓட்டிற்காய் மக்களை எப்படி பிரிக்கலாம் என்ற சூது கொண்ட அரசியல்வாதிகளும், இனத்திற்கு இன மக்களையே எதிரிகளாக்கி ஓட்டுக்களை பிரிக்கும் வஞ்சனையும், வெற்றிப் பெறுவதற்காய் நிறுத்தப்படும் டம்மி வேட்பாளர்களும் , ஏதோ விபரீத்த்தால் நிலவும் அரசியல் சூழ்நிலையில் டம்மிகள் ஜெயிக்கும் போது ஏற்படும் நிலை மாற்றத்தையும் பார்த்திருக்கும் நாம் அதை அரை நூற்றாண்டிற்கு முந்தைய நாவலில் படிக்கும் போது நிச்சயம் எழுத்தாளர் ஒரு தீர்க்கத் தரிசியா அல்லது இந்திய மனம் இது போன்ற சூழ்நிலைக் கோட்பாடுகளில் தான் வளர்ந்து வந்திருக்கிறதா என்ற ஆச்சர்யத்தையும் கொடுத்து விடுகிறது.

இதில் புளியமரத்திற்கான பங்கு என்ன என்பதைப் பார்க்கும் சமயம் வாழ்ந்த காலத்தில் அது சுயநலமில்லாத தன்மையையே வெளிப்படுத்துகிறது. அது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் மனிதனால் புனையப்படும் யட்சிகளுக்கும், தெய்வங்களுக்கும் தன்னை ஒப்புக் கொடுக்கிறது. அதன் வாழ்வை காக்க அதனை (இயற்கையை) நேசிக்கும் ஒருவனால் தான் முடியும் ஆம் அதனை இரண்டு கதாப்பாத்திரங்கள் தன் புனைவின் சாமர்த்தியத்தால் காப்பாற்றினாலும் கடைசியில் ஜெயிப்பது மனிதனின் சுயநலப் போக்கு மட்டும் தான் என்பதை உணரும் நேரம் நம்மில் இன்று வாழும் எந்த இயற்கை ஜீவராசிகளையும் மனிதக் கண் கொண்டு பார்க்காமல் அதன் இதயத்தின் வழி பார்க்கும் சமயமே அதன் இழப்பின் வழி நமக்கு அகப்படும். இழப்பின் அருகில் இருப்பவனுக்கும் மட்டும் தான் இழப்பை மிக வேகமாயும் ஆழமாயும் உணர முடியும்.

மிக உன்னதமான அழகியல் மிகுந்த சிந்திக்க வைக்கக் கூடிய நாவலைக் தன் முதல் நாவலாக்க் கொடுத்த சு.ரா என்கிற சுந்தரா ராமசாமிக்கு வாழ்த்துகள்.



Tuesday 30 January 2018

எங்கே காந்தி..

காலம் எழுபது கடந்து விட்டது.இன்று நாம் சுவாசிக்கும் காற்றிற்கும் சுதந்திரமுண்டு. சுதந்திரமில்லா அந்நாளில் அந்நியருடன் அன்பொன்றே விடுதலைக்கான இலக்கணம் என்றாக்கி அதனை செயல்படுத்தி சுதந்திர காற்றை ஸ்பரிசிக்கச் செய்த அந்த ஆளுமையை வீழ்த்திய தினம். 

ஏதோ சாதீயத்தையும் மொழியையும் தூக்கி பிடித்த தலைவர்களை இன்று நாம் ஆதர்சன புருஷனாக்கி அன்றைய தலைமையை அனாமதேயக் கேள்விகளால் அநாதையாக்கி இன்று களிப்புடன் நம் வாழ்வை நகர்த்திக் கொண்டு வரும் நமக்கு, அவரின் நினைவுகளை மறப்பதொன்றும் அசாதாரண விசயமில்லை. காரணம் அவர் மிகச்சாதாரணர், எளிமையின் ஆளுமை. மனிதநேயத்தை உண்மையாகவே நேசித்தவர். அடிமை பெற்ற மானுடக் குலத்தை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தவர். 

இன்று அவரைப் பற்றிய பேச்சுக்களே தம்மை தாழ்த்தி விடுமோ என்ற தாழ்வு மனப்பான்மையும் போலி எண்ணங்களும் நம்முடனிருந்து அவரை அகற்றியே வைப்பதும் இன்றையத் தேவைகளுக்கான அரசியல் நடவடிக்கைகளுக்கு அவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை மறுக்க முடியாத சூழலில் நாம் சிக்கித் தவித்து வருகிறோம்.

சுட்டு வீழ்த்திய நாளுடன் இந்திய அரசியலும் அதன் தன்மைகளும் மாகத்மாவின் எண்ணத்திற்கு நேரெதிராக பயணம் செய்யத் தொடங்கவும் என்றும் அவர் அரசியல் ஆதாயத்திற்கான பிம்பமாக மட்டும்  மாறிப்போனதுமே இந்த எழுபதாண்டுகால அரசியலில் அவரை கடத்தி வந்த சாதனை. 

அவருடைய நினைவு நாளில் அவரை நினைக்கக் கூட அருகதையற்றவராகி விட்ட நம்மிடம் அவரை மறக்க உள்ள உண்மையான விபரங்கள் யாதென்று யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மவர்களுக்கு ஆட்டுமந்தை போல் ஒருவர் சொல்லியதை அடியொற்றி அவரைத் தூற்றுவதற்குகான போலித் தரவுகளை மட்டுமே கண்டு வைத்துள்ளோம்.

போற்ற மனமில்லாத போனாலும் தூற்றுவதை தவிர்க்கக் கூட நம்மிடம் மனதில்லாத மாக்களாய் மாறிப் போன சூழல். அன்றே அவரின் சந்தேகம் மேனாட்டுக் கல்வியின் களவாணித்தனம் நம் மனதை மனித நேயத்தோடோ அல்லது மகாத்மாக்களை நினைவு படுத்தி பார்க்கவோ சொல்லித் தராது  என்ற தாரக மந்திரத்தை நினைவுக்குட்படுத்துவது அவசியமாகிறது.

இன்றைய கல்வி இனவெறியையும் மொழி வெறியையும் தூக்கிப் பிடிக்கும் களவாடிகளை தலைவராகக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்வது நம்முன் உள்ள ஒரே வழியாக மாறிக்கொண்டே வருகிறது. அவர்களின் ரத்தவெறியின் வரலாறு ஓரிடத்தில் முடிந்து இன்னொரு இடத்தில் முளைவிட்டிருக்கிறது. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கி வைக்கப்பட்டிருக்கும்  வெறியாட்டப் போராட்டங்களும், அந்த கொலைக் களத்தில் விருந்துண்ண காத்துக் கொண்டிருக்கும் மதியிழந்த மானுடப் பதர்கள் நாக்கை தொங்க விட்டு காத்துக் கொண்டிருக்க, சுதந்திரம் வேண்டிய அந்நாளிலும் இந்த நாட்டை பிளவுப்படுத்த நினைத்த சக்திகள் அண்டை அயலாரின் இசம் வசம் வீழ்ந்து மேற்சொன்ன ரத்த வெறிக்கு தூபமிட்டு கொண்டிருக்கும் சாபத்தின் நிழலில் நம் வாழ்வை நகர்த்துவதும், ஜனநாயகத்தில் எல்லாவற்றிற்கும் சுதந்திரம் என்று சொல்லி வரம்பு மீறிய செயல்களை வாக்கு தகிடுதத்தத்தில் புரிந்து பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை சிதைத்து அதன் வெறுப்பில் ஏதாவது இரத்தம் கிடைக்காதா என்ற காத்துக் கொண்டிருக்கும் ஓநாய்களின் மனம் படைத்த அரசியல்வியாதிகளோடு நம் வாழ்வு கடக்கும் நிலையில் நாம் உறுதி எடுக்க அவரின் போதனைகளும் , வாழ்வியல் சாதனைகளும் மட்டுமே நம்மை நாமாக திருப்பி எடுக்கக் கூடிய ஆயுதமாகும்.  

அந்நிய தேசத்தின் பிடியில் வீதிக்கொரு தேசமாய் சிதறுண்டிருந்த தேசம் வாழ்வியல் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒரே இனமாய் பாரதத்தின் பிள்ளைகளாக அங்கீகரிக்கபட்டு மகாத்மாவின் மூலம் வாங்கிய சுதந்திரத்தை  ஓநாய்களின் உளறல்களுக்கும் அவர்களால் திருத்தப்பட்ட வரலாறுகளுக்கும் நாம் இரையாக்கப் பட்டு இந்திய தேசத்தின் இறையாண்மையை கூறு வாங்கத் துடிப்பதை தடுக்க உறுதி பூண்டு அந்த புல்லுருவிகளை தேசத்திற்கு இனம் காட்டி தூக்கியெறிய கடமை பட்டுள்ளோதோடு தொலைந்து போன காந்தியையும் காந்தியத்தையும் நம் வாழ்வியலில் ஒரு பகுதியாக கொண்டு வர ஒரு சிறிய முயற்சியை மேற்கொள்வோம்.

வாழ்க காந்தி... 


Tuesday 16 January 2018

நூல் விமர்சனம் : தாண்டவராயன் கதை

பாகீரதியின் வாசிப்பிற்குப் பின்னுண்டான உந்துதல் பா.வெங்கடேசனின் மற்றுமுள்ள படைப்புகளையும் வாசித்து விட வேண்டுமென்று ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரின் எந்த படைப்பும் அச்சில் இல்லை என்பதிருந்தாலும் நம்பிக்கை ஒரு பக்கமிருக்க அதன் பலம் என் பக்கம் என்னவோ எப்போதுமே இருக்கிறது. புத்தகத்திற்காய் ஒரு கணிசமான தொகையை செலவழித்தாலும் அதை தேடிப் போய் கண்டடையும் பைத்தியத்தில் நான் இன்னும் சேரவில்லை என்றே கருதுகிறேன். சொல்லி வைத்த புத்தகக் கடையிலிருந்து எனக்கான புத்தகம் காலம் தாழ்த்தாமலே வந்து சேர்ந்ததும் ஒரு கதை தானென்றாலும் அந்த கதை சொல்லலுக்கான தளமிதுவில்லை என்ற எண்ணத்தில் புத்தகத்தின் நேரடி விமர்சனத்திற்கு சென்றுவிட எத்தனிக்கும் மனதில் என்ன எழுதுவது என்ற அச்சத்தோடே தொடங்கும் பாக்கியசாலியாக இருக்கிறேன். படித்த பிடித்த புத்தகத்தை விமர்சனம் செய்யாமல் கடப்பது அப்புத்தகத்தின் மீதான நமது வெளிப்பாடுகளை நம்முள் புதைத்து விடுவது போன்றதாகும்.

பாகீரதியின் மதியத்திற்குப் பின்னானத் தேடலில் எழுத்தாளனின் இந்தக் கதைக்கான ஒன்றிரண்டு விமர்சனங்கள் கண்ணில் தட்டுப்பட அதனை வாசிக்கும் போது அந்த புத்தகம் வெளியிட்ட காலப்பொழுதில் அப்புத்தகம் தானடைய வேண்டிய இடத்தை அடையவில்லை என்பதே இந்த விமர்சனங்களை வாசித்த பின்னான அனுபவமாய் காண நேர்ந்தது. அது என்னவோ இந்த எழுத்தாளனுடையப் படைப்புகளை வைத்திருக்கிறோம் அல்லது படிக்கிறோம் என்று சொல்லும் போதே அதற்குரிய பின்னூட்டங்கள் நம்முள் பிரமிப்பையோ பயத்தையோ செலுத்தி விடுவது வரவேற்பதற்குரிய அம்சமாய் படாமலும் இந்த புத்தகத்தை அந்த அச்சத்தினுள்ளே கடத்தி மறைத்து விடும் போக்கே இந்த புத்தக இடம் பெற வேண்டிய இடத்தை இழந்து விட்ட நம்பிக்கையை என்னுள் கொடுக்கிறது.

புனைவிற்குள் வரலாற்றின் நாயகர்களை நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளோடு புகுத்தி அந்த கதையை உயிர்பிக்கும் ஆசானாய் மாறுவதே எழுத்தாளனின் திறமாய் இந்தப் புத்ததகத்தில் என்னால் காண முடிகிறது. இத்தனை வரலாற்றுத் தரவுகளையும் இடங்களையும் தன் மனதினுள் கடத்தி அதனை தன்னெழுத்தின் மூலம் படிக்கும் நம்மையும் கொண்டு விடும் போது நிச்சயமாய் பிரமிப்பே மிஞ்சுகிறது.

வரலாறுகள் எப்போதும் இனிமையாக இருப்பதில்லை என்பதில் என்னுள் மாற்றுக்கருத்துகள் பிறந்ததில்லை.கதைக் களம் சொல்லும் விசயம் காலனியாதிக்க சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளோடே ட்தொடங்கும் புதினம் நம்மை கொண்டு போவது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் இங்கிலாந்தில் துவங்கி பிரெஞ்சு புரட்சியினுள்ளே நம்மை கொண்டு சென்று அங்கிருந்து நம்மை ஆளப்போகின்ற ஆங்கில ஆதிக்கத்தின் தொடக்கமான கிழக்கிந்திய கம்பெனி தென்னிந்தியாவில் தன்னாதிக்கத்தை நிலை நிறுத்த முயல வேண்டி திப்பு சூல்தானின் பேசவோ போரிடவோ முயன்ற தருணத்தின் கதையாக மாற்றி நிற்க விடாமால் நீலவேணி என்ற குதிரையின் ரதத்தூடே காலச்சக்கரத்திற்குள் புகுத்தி விடுகிறது. அதன் பின்னான நம்மின் நிலை படிப்பதிலிருந்து வரலாற்றையும் புனைவில் நீளும் கற்பனைகளில் கதை, கதைக்குள் கதைகளாக விரிந்து செல்கிறது.

பரிச்சயப்படாத என்று சொல்லக் கூடிய ஆனால் படிக்க முடிகின்ற ஒரு எழுத்தைக் கொண்டு நம்மில் வியாபிக்கும் எழுத்தாளனை பாராட்ட வேண்டாம் அதற்கு பதில் அந்த எழுத்தை எல்லோரும் வாசிக்கவும் அதை விவாதிக்கவுமான முயற்சிகளை செய்வதில் நானும் முனைகிறேன் என்பதில் எனக்கும் சிறிய மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்கிறேன்.

படிக்கும்  புத்தகங்கள் வெறுமனே நம்முள் புகுந்து நம்மை கடந்து விடாமல் சொல்லும் செய்தியையோ அல்லது சொல்ல முற்படுகின்ற வரலாற்றில், நடந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை புனைவின் சாதுர்யத்தில் படிக்கும் மனதின் திடச் சித்தத்தில் நிச்சயம் பதிந்து விடும் கதாப்பாத்திரங்களாக எலினாரும், ட்ரிஸ்ட்ராமும், ஷெல்லியும், கெங்கம்மாவும், விபூதியும், துயிலார் பூசாரியும், சொக்க கௌடவும் , நீலவேணியும், தாண்டவராயனும், கோணய்யனும் இருப்பார்கள்.

இந்த புத்தகம் படித்த முடித்த போது எந்த தாக்கமும் என்னுள் ஏற்படவில்லை என்று சொல்லி விட முடியாமல் கதையில் வரும் நீலவேணியின் பாதைக்கான நீளும் கதைப்பாடலும் ,ஷெல்லியின் கதையும், துயிலார் இனத்தின் அழிப்பும் நாடோடி வாழ்க்கையும் , கிழக்கிந்திய மற்றும் திப்பு சூல்தானின் ஆளுமைக்குள்ளில் மனித வாழ்வியலும் நம்முன் கடந்து போகிறது.

நாவலின் குறை படிக்கும் போது சில இடங்களில் தோன்றிய சலிப்பும் சில  நேரம் கதை களத்திலிருந்து கடந்து சென்று விடுகிறதோ என்ற தோணலிருந்தாலும் கடந்து போன களமும் படித்துச் செல்லும் நேரம் கதைக்கான ஒரு அம்சமாய் மாறி போய் விடும் என்பது என் நம்பிக்கை.

சிக்கலான நீண்ட கதையம்சத்தை கொண்ட நாவலை ஒரு முறை வாசித்து விட்டு விமர்சனம் எழுதுவது ஆகச் சிறந்த முறையல்ல காரணம் கதையைப் படிக்கும் மனம் அதன் முடிவை மட்டுமே
மனதில் கொண்டு நகரும் போது விடுபடும் பல நிகழ்வுகளும் அதனுள் இருக்கலாம். நிச்சயம் மீண்டும் படிக்கும் போது நம்முள் வேறு பல சிந்தனைக்குள்ளும் இட்டு செல்லும் என்ற எண்ணவோட்டத்தில் நல்ல விமர்சனத்திற்காய் மீண்டுமொரு முறையோ அல்லது அதற்கு மேலுமோ படிக்க உகந்த இடத்தில் தாண்டவராயன் கதை இருப்பதாகவே உணர்ந்து இது போன்ற பிரமாண்ட கதையைக் கொடுத்த பா.வெங்கடேசனிற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .